செப்டம்பர் 22 அன்று இரவு 7:30 மணிக்கு நம்மயாத்ரி
ஆட்டோ ஏறி சிட்டி ஸ்டேஷன் பேக் கேட் 8:15க்கு ரீச்
ஆனேன். வழி நெடுக நல்ல மழை. சகோதரன் ரமேஷ்
8:45க்கு வந்தான். 9:15 மணிக்கு மைஸூர் தூத்துக்குடி
ட்ரெயின் வந்தது.
ட்ரெயின் கிளம்பி ஒரு மணி நேரம் கழித்து படுக்கை
போட்டாச்சு. லோயர் பெர்த். மறுநாள் காலை 6:30க்கு
திண்டுக்கல் ஸ்டேஷன்ல இறங்கியாச்சு. பலதடவை இந்த
ஸ்டேஷன் வழியாகபோயிருக்கேன். வாழ்க்கையில் முதல்
தடவை திண்டுக்கல் ஸ்டேஷன்ல இறங்கினேன்.
டாக்ஸி பிடுச்சு ஒரு லாட்ஜ்க்கு போனோம். குளித்துமுடிச்சு
தமிழ் பாரம்பரிய உடை (வேஷ்டி சட்டை) அணிந்து
அங்கேயுள்ள உணவகத்தில் பிரேக்பாஸ்ட். பொங்கல் வடை
மல்லேஸ்வரம் கையேந்திபவன் பொங்கல் வடை ஆயிரம்
தடவை உயர்வு.
ஆட்டோ ஏறி 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள
பாதாள செம்பு முருகன் கோவில் விஜயம். திண்டுக்கல்லில்
இருந்து பழனி செல்லும் சாலையில் ராமலிங்கம்பட்டி என்ற
கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கோவில்
அமைந்துள்ளது.
கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல்
தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக
நின்றுகொண்டு இருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட
இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டது.
உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன்
சிலை இருப்பது இங்கு மட்டும்தான்.
முன்மண்டபத்தில் செல்வவிநாயகர் அமர்ந்துள்ளார்.
முருகன் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில்
உள்ளது. 18படி கொண்ட குகையிலஇறங்கி சென்றோம்
9படி இறங்கியதும் ஒரு சிறிய மண்டபத்தில் காலபைரவர்
இருக்கிறார். பைரவர் அனைத்து கோவில்களிலும் தெற்கு
நோக்கி அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு கிழக்குநோக்கி
காட்சி தருகிறார்.
அடுத்த 9படி இறங்கியதும் முருகன் சன்னிதி
அமைந்திருக்கிறது. பாதாள கருவறையில், செம்பு
உலோகத்திலான முருகப்பெருமான் நின்ற கோலத்தில்
அருள்பாலிக்கிறார். வலது கையில் அபயமுத்திரையும்,
இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார்.
பொதுவாக முருகனின் வேல் வலதுகை புறம் இருக்கும்.
ஆனால் இங்கு உள்ள முருகனின் வேல் இடது கை புறமாக
இருப்பது இன்னும் சிறப்பு. இந்த சிலைக்கு முன்பு,
திருக்கோவிலூர் சித்தர் பூஜித்த முருகன் சிலை உள்ளது.
( பழனி முருகன் கோவிலில் நவபாஷாண சிலையை
உருவாக்கிய போகர் சித்தரின் மறுஅவதாரமாக,
திருக்கோவிலூர் சித்தர் கருதப்படுகிறார்.
போகர் சித்தரையும், அவருடைய சீடர் புலிப்பாணியையும்
மானசீக குருவாக போற்றி பூஜித்து வந்தவர் தான்
திருக்கோவிலூர் சித்தர். இவர் சுமார் 650 ஆண்டுகளுக்கு
முன்பு பழனியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்
உள்ள ராமலிங்கம்பட்டியில் வசித்து வந்திருக்கிறார்.
இவர், 1½ அடி உயரத்தில் முருகன் சிலையை தங்கம்,
வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் போன்ற பஞ்சலோகத்தால்
வடிவமைத்து பாதாளஅறையில் பிரதிஷ்டை செய்து
பூஜித்து வந்துள்ளார்.)
பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான
முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்புமுருகன்'.
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு 18 வகையான
மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட விபூதி
பிரசாதமாக வழங்கப்படுகிறது. நறுமணம் கமழும் இந்த
விபூதி பல்வேறு நோய்களை குணமாக்கும் மகத்துவம்
வாய்ந்ததாகும். பொதுவாக இந்த விபூதி கிருத்திகை, சஷ்டி
அம்மாவாசை பௌர்ணமி மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய
தினங்களில் மட்டுமே வழங்கப்படும்.
இந்த கோவிலில் நாம் முருகனை இறங்கிசென்று தரிசித்து
விட்டு ஒரு ஏற்றமான பாதையில் வருவது சிறப்பானது. அது
நம் வாழ்க்கைக்கும் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என
அனைவராலும் நம்பப்படுகிறது. கீழே இருப்பவர்களை
முருகன் வாழ்க்கையில் தூக்கி உயரத்தில் விடுவதாக
அர்த்தம் என்கிறார்கள்.
கோவிலின் முன்பாக அருகே குளம் போல் நீர் நிரம்பி
உள்ள இடத்தில் ஜலகண்டேஸ்வர் காட்சி தருகிறார்,
இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது
கருங்காலி, செங்கருங்காலி மாலைகள்.
கருங்காலி மாலைகளை முருகனின் பாதத்தில் வைத்து
பூஜை செய்து பக்தர்களுக்குவழங்கப்படுகிறது. இதேபோல்
கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு
சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கருங்காலி மாலைகளை அணிவதன் மூலம் திருமண தடை
நீங்கும். பஞ்ச பூதங்களின் துணைகிடைக்கும். எதிர்மறை
சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம்
பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள்
சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின்
அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மனஇறுக்கம்
விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடையும். ரத்த அழுத்தம்
சீராகும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் பூஜை
செய்யப்பட்டநெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங்கப்படுவது
குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் தரப்படும் கருங்காலி மாலையை உங்கள்
கழுத்தில் அல்லது உங்கள் கைகளில்எப்போதும்
அணிந்தவாறு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி
மட்டுமே வந்து சேரும் என்கிறார்கள்.
இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலையை நாம்
அணிந்திருக்கும் போது எப்படி பட்டகெட்ட சக்திகள் ஆக
இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது இந்த சக்திகளை
எல்லாத்தையும் நல்ல சக்திகளாக மாற்றக்கூடிய சக்தி
இந்த கருங்காலி மரத்திற்கு உண்டு. இதை நீங்கள்
அணிந்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்களுடன் கூடிய
மனிதர்கள் உங்களிடம் வந்தால் கூடஅந்த கெட்ட
எண்ணங்களை தவிர்த்து விட்டு உங்களிடம் நல்லபடியாக
பேசுவார்கள் என்று இந்த மாலையை அணிந்தவர்கள்
பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் சக்தி
வாய்ந்த மரம்தான் இந்த கருங்காலி. இந்த கருங்காலி
மாலையை முதலில் இந்த பாதாள செம்பு முருகன்
கோவிலில் தான் அறிமுக படுத்தினார்கள். இங்கு
கொடுக்கப்படும் மாலை மிகவும் பிரபலமானது.
அந்த காலத்துப் போர் வீரர்களுக்கும் மற்றும் இந்த
காலத்தின் இராணுவ வீரர்களுக்கும் இந்தகோவிலில்
பரிவட்டம் கட்டி முதன்மை மரியாதை செய்து வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வந்தால்
நினைக்கும் காரியங்கள் எல்லாம் கைகூடிவரும் என இங்கு
வந்து பயன் அடைந்த பலர் கூறுகிறார்கள்.
இந்த கோவிலில் நவகிரகங்களால் நமக்கு உண்டாகக்
கூடிய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த
பாதாள செம்பு முருகன் போக்கி விடுவார்.
செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகன் திகழுகிறார்
அதனால் அரசுவேலையில், காவல்துறை சம்பந்தமான
வேலைகள், ராணுவம் சம்பந்தமான வேலைகளில்
பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டி இங்கு வந்து
முருகனை தரிசித்து செல்கிறார்கள். அவர்களுக்கு
வேண்டிய பலனும் உடனே கிடைக்கிறது என்பதால் பல
அதிகாரிகள் இந்த கோவிலுக்கு படைஎடுத்து
வருகின்றனர் கூறுகிறார்கள்
ஒன்பது மணிக்கு வந்தோம். 2மணி நேரம் கோவிலில்
இருந்தோம். 11க்கு கிளம்பி வந்தோம். சிறிது ஓய்வுக்கு
பின் லஞ்ச். லெமன் சாதம் தயிர் சாதம்.
உண்ட உணவை குறைசொல்லக்கூடாது.
4 மணிக்கு கிளம்பி திண்டுக்கல் ஸ்டேஷன்.
Tejas Express to Trichy Junction.
ஏ2பியில்டிபன். யூபெர் மூலம் திருச்சி ஏர்போர்ட்.
என்ன ஒரு பிரமாண்டமான விமானநிலையம்.
அழகுஅழகான பெரிய சிற்பங்கள்,
கண்கவரும் வேலைப்பாடுகள்.
போட்டோ எடுக்கவில்லை. மிகப்பெரிய மனக்குறை.
இண்டிகோ, நாற்பது நிமிடங்களில் பெங்களூரு.
ஆனால் இல்லம்வந்துசேர டாக்ஸி எடுத்தது 90 நிமிடங்கள்.
நானும் இரண்டு கருங்காலி மாலைகளை முருகனின்
பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துவந்து என் இரு
புதல்வர்களுக்கும் கொடுத்து அவர்களை
அணிய செய்துவிட்டேன்.
No comments:
Post a Comment