Thursday, October 26, 2017

திரிம்பகேஸ்வர் ஆலய தரிசனம்.


'தம்பி' இல்லத்தில் 17 நாட்கள் தங்கியிருந்து நாசிக்கின் பழைமையும், பாரம்பரியத்தையும் அனுபவித்து ரசித்து மகிழ்ந்தோம். இவை எல்லாவற்றையும்  "Nasik Visit" என்ற பதிவில் ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். அந்த பதிவில் நாங்கள் ஆத்மார்த்தமாக அனுபவித்த ஏழு ஆலயங்களின் தரிசனங்களை வேறு பதிவுகளில் விவரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளேன்.

ஆன்மிக விஷயங்கள் தாய்மொழியில் இருந்தால்தான் ஒரு ஈடுபாடு இருக்கும். அதனால்தான் ஆலய தரிசனத்தை தமிழில் பதிவிடுகிறேன்.

இந்த முதல் பதிவில் திரிம்பகேஸ்வர் ஆலய தரிசனம்.

'தம்பி' கார் ஓட்ட, நான் உஷா ரேணு இல்லத்தைவிட்டு காலை 8 மணிக்கு கிளம்பினோம். இல்லத்திலிருந்து 20 KM தொலைவிலேயுள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகிய திரிம்பகேஸ்வர் ஆலயம் நோக்கி பயணம்.

காலை 9 மணி அளவில் ஆலயம் சென்று அடைந்தோம். ஒரு மண்ணின் மைந்தனை set up செய்தோம். அப்பொழுதுதான் எல்லாம் easyயா முடியும்.



பிரம்மகிரி மலை அடிவாரத்தில் முழுவதும் கருப்பு கருங்கற்களால் கவர்ச்சியுடைய, மனதைத்தொடுகிற சிற்பக்கலையுடன் கட்டப்பட்ட பழைமையும், பாரம்பரியமும் வாய்ந்த கோவில். கிழக்கு மேற்காக 265 அடி நீளமும் வடக்கு தெற்காக 218 அடி அகலமும் வாய்ந்த அரண்கள். நான்கு திசைகளிலும் நுழைவுவாயில் அமைந்துள்ளது. தர்ம சாஸ்திரங்கள்படி ஒவ்வரு திசைக்கும் ஒவ்வரு தெய்வ அனுக்கிரஹம் உண்டு.

ஆலயத்தின் வடக்குப்புறத்தில் இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அரணில் அமைந்துள்ள நுழைவுவாயில் வழியாகத்தான் பக்தர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். மேற்கு நுழைவுவாயிலுக்கும் தெற்கு நுழைவுவாயிலுக்கும் நடுவில் ஒரு அழகான சிறிய குளம் இருக்கிறது. 'அம்ருத் குந்' என்று அழைக்கிறார்கள். இந்த குளத்தின் நீரைத்தான் அணைத்து பூஜை காரியங்களுக்கும் உபயோகிக்கிறார்கள்.
இந்த குளத்தின் ஆழம் கோவில் கோபுரத்தின் உயரமான 96 அடி என்று நம்பப்படுகிறது.

பிரதான ஆலயம் அரண்களுக்கு நடுவில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது. கிழக்கு தெற்கு வடக்கு திசைகளை நோக்கி மூன்று நுழைவுவாயில் உள்ளது. பிரதான வாயிலில் பெரிய நந்தி பகவான் ஈஸ்வரனை நோக்கி அமர்ந்துயுள்ளார். மிகுந்த பரப்புஅளவுயுள்ள அழகான குவிந்த கூரை மண்டபம். அதன் நடுவில் 12 அடி பரப்பில் சலவைகல்லிலான ஆமையின் சிற்பவடிவம். 



கர்பகிரஹத்திற்கு 7 படிகள் இறங்கி கீழே போகவேண்டும். கட்டைவிரல் அளவில் பிரம்மா-விஷ்ணு-சிவன் என்று மூன்று சுயம்பு பாண லிங்கங்கள். சிவபெருமானை குறிக்கும் பாணலிங்கத்தில் இருந்து தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. புனித கங்கை என்று நம்பப்படுகிறது. இந்த லிங்கங்களுக்கு கிழக்கு புறத்தில் சலவைகல்லிலான அன்னை பார்வதியின் பெரிய சிலை உள்ளது.

ஒவ்வரு திங்கள்கிழமை மாலையில் தங்கக்கவசத்தால் மூடப்பட்டுள்ள  மூன்று லிங்கங்களுக்கு பாண்டவர்களால் கொடுக்கப்பட்ட வைரம் வைடூரியம் ரத்தினம் கோமேதகம் முதலிய கற்களால ஆன கிரீடம் சாத்தப்படுகிறது.

தாந்த்ரீக சாஸ்திரங்கள்படி பூஜை புனஸ்காரங்கள் இடைவிடாமல் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவில் வேறுயெங்கும் இது மாதிரி நடக்கவில்லை என்று கூறுகிறார்கள். கரும நிவிர்த்திக்கு பிரீதி என்றும், இதுதான் திரிம்பகேஸ்வர் ஆலயத்தின் தனிச்சிறப்பும் என்றும் கூறுகிறார்கள். தண்ணீர் வந்துகொண்டே இருப்பதால் லிங்கங்கள் படிப்படியாக சிதைந்துகொண்டே இருக்கிறது. அழிந்து கொண்டுருக்கும் மனித சமுதாயத்தை இது குறிக்கிறது என்று கூறுகிறார்கள்.



மலையடிவாரத்திலேர்ந்து 750 படிகள் ஏறி போனால் "கங்கா துவார்" என்று ஓர் இடம் உள்ளது. ஆனால் அந்த 'மண்ணின் மைந்தன்' எங்களை ஆட்டோவில் மலையை சுற்றிக்கொண்டுபோய் ஒரு இடத்தில் இறக்கிவிட்டான். அங்கேந்து 200 படிகள்தான். 



பிரம்மகிரி மலை உச்சியில் இருக்கும் சிவபெருமானின் ஜடாமுடியில் இருந்து வெளிவரும் புனித கங்கை இங்குதான் கண்களுக்கு தென்படுகிறாள். கங்காமாதாவின் சிலை உள்ளது. இச்சிலைக்கு கீழ் பசுவின்முகம் போல் அமைந்துள்ள 'கோமுக்" மூலம் சொட்டுசொட்டாக கங்கை வெளிவருகிறாள். இதுதான் கோதாவரியின் மூலம். இந்நீர் குகைதுவாரம் போல் இருக்கும் ஒரு மிகச்சிறிய தொட்டியில் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இது வராக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. 



இதற்கு வடக்குப்புறத்தில் கோலாஸுர அசுரனை வதம் செய்த ஆதி பராசக்தியின் அம்சமான கோலம்பிகா தேவியின் சிலை இருக்கிறது. 



இங்கேயிருந்து 40 படிகள் இறங்கி சற்று வடக்குப்புறம் மலையில் உள்ள மண்ணும் கற்களாலும் கூடிய சிறிய பாதையில் 2 KM ஏறினால் மிகச்சிறிய குகை உள்ளது. 2-3 நிமிஷங்கள் தவழ்ந்து உள்ளே சென்றால் உட்காரும் உயரம் உள்ள ஒரு பரந்த இடம் இருக்கிறது. அங்கே கௌதம ரிஷியும், அவரது பத்தினி அகல்யா தேவியும் பூஜித்த கைவிரல் அளவில் 108 சுயம்பு ஷிவலிங்கங்கள் இருக்கிறது. 




நானும் உஷாவும், தம்பியும் ரேணுவும் 108 லிங்கங்களுக்கும் ஜலம் ஊற்றி பூ போட்டு ஐந்துஎழுத்து மந்திரம் சொல்லி பூஜை செய்து நமஸ்காரம் பண்ணிணோம்.  ஈஸ்வர அநுக்கிரகம். எங்கெங்கும் சிவம். சிவமயம், சிவ ஒளி, சிவ அதிர்வு, சிவ தரிசனம், 



அப்புறம் ஒரு கரடுமுரடான பாதையில் 3 KM மேலே ஏறினால் கோரக்நாத் குகை இருக்கிறது. குரு கோரக்நாத் தியானம் செய்த இடம். ஒரு சிவலிங்கமும், அவர் அணிந்த பாதுகைகளும் இருக்கிறது.  இந்த இடத்திற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணங்கள் யாருக்கும் தெரியவில்லை. ஆகையால் நானும் தம்பியும் இங்கே போகவில்லை.



'வராக தீர்த்தத்தில்' தெரியும் கங்கை அதற்கப்புறம் கண்களுக்கு தெரியாமல் மலையடிவாரத்தில் உள்ள 'குஷ்வர்த் தீர்த்' என்ற குளத்தில்தான் வெளிவருகிறாள்.  இதுதான் புனிதம் மிகுந்த கோதாவரி நதி துவக்கம்.



இங்கேயிருந்து 300 படிகள் மேலே ஏறி, பிரம்மகிரி மலை உச்சியில் இருக்கும் சிவபெருமானின் ஜடாமுடியில் இருந்து வெளிவரும் புனித கங்கை தரிசனம் பண்ண ஆசை, அவா. மத்தியானம் 2 மணி ஆகிவிட்டதால் ஏறுவது கஷ்டம். மேலும் சாயங்காலம் 5 மணிக்குள் கீழே இறங்கிவிடவேண்டும். ஆகையால் அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம்.

200 படிகள் கீழே இறங்கி, அதே ஆட்டோவில் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மராட்டிய மாநிலத்தின் அமிர்தமான கரும்புசாறு மூன்று கிளாஸ் கபளீகரம். அப்புறம் 'தம்பி' சாரதியாக பிரயாணத்தை தொடர்ந்தோம்.

ஒரு ஜீவனின் நற்காரியங்களால் விளையும் புண்யம் விதியால் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டினால் தான் திரிம்பகேஸ்வர் ஆலயம் செல்ல எண்ணம் தோன்றுமாம். திரிம்பகேஸ்வர் தரிசனத்தால் சகல பாவங்களுக்கும் தீர்வு காணப்படுகிறது என்று புராணங்கள் கூறுகிறது. நாங்கள் நால்வரும் அவ்வளவு புண்யாத்மாக்களா? 

ஸர்வேஸ்வரா, எல்லாம் சிவமே. அனைத்தும் சிவமே. 

திரிம்பகேஸ்வர் ஆலயத்திலிருந்து இல்லம் நோக்கி பயணம். திரும்பும் வழியில் தரிசித்த ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலய, சோமேஸ்வர் ஆலய தரிசனங்களை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.

திரிம்பகேஸ்வர் ஆலயம் பற்றி நன்கு தெரிந்துகொள்ள கீழே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும்.

2 comments:

  1. Very nice blog. We had been to this Temple back in 2008 and had a wonderful darshan. It was truly a Divine experience

    ReplyDelete