Thursday, November 16, 2017

ஸ்ரீதாமிரகோட்ட விநாயகர்


ஸ்ரீதாமிரகோட்ட விநாயகர், அம்மன் சன்னதி, திருப்பத்தூர்


இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தி திரிபுர சம்ஹாரத்திற்கு முன் தோன்றிய புராதன மூர்த்தி ஆவார். தூணில் எழுந்தருளி இருந்தாலும் இவருடைய தொன்மை சொற்பதம் கடந்தது. 

எம்பெருமான் பரமேஸ்வரன் தாமிரகோட்டை, இரும்புக் கோட்டை, வெள்ளிக் கோட்டை என மூன்று கோட்டைகளாக விளங்கிய அசுரர்களை சம்ஹாரம் செய்ய விரைந்தபோது எம்பெருமானின் ரதத்தின் அச்சை உடைத்து எக்காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் ஸ்ரீவிநாயக மூர்த்தியை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உலகிற்கு இத்திருவிளையாடல் மூலம் பிள்ளையார் உணர்த்தியதை நாம் அறிவோம். 

அப்போது ஒவ்வொரு முப்புர கோட்டையையும் சம்ஹாரம் செய்வதற்காக எம்பெருமான் ஒவ்வொரு விநாயக மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு தாமிர கோட்டை வடிவில் இருந்த அசுர சக்தியை சம்ஹாரம் செய்வதற்காக எம்பெருமான் திருப்பத்தூர் திருத்தலத்தில் வழிபட்ட மூர்த்தியே ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தி ஆவார். 

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீதாமிரகோட்ட மூர்த்தியை அர்ச்சித்து வழிபட்டபோது பிள்ளையார் மூர்த்தி தன்னுடைய இறைஅவதார அனுகிரக சக்தியாக எம்பெருமானின் தலையில் சூடி இருந்த கங்கா தேவிக்கு தாமிர சக்தியை அளித்தாராம். அன்று முதல் கங்கை நீரில் தாமிர சக்திகள் பொங்கிப் பெருகி கங்கை தீர்த்தத்தில் என்றும் வற்றாத குளிர்ச்சி ஏற்பட்டதாம். எனவே கங்கை நீரை எவ்வளவு கொதிக்க வைத்தாலும் அதன் சீதளத் தன்மை குறையாது என்ற தெய்வீக அனுகிரகத்தை வாரி வழங்கியவரே ஸ்ரீதாமிரகோட்ட விநாயகர் ஆவார். 

தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதனைப் போல் தந்தைக்கும் அருள்புரிந்த தனயனே ஸ்ரீதாமிர கோட்ட விநாயகர். 

எக்காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயக மூர்த்தியை சிறப்பாக திருப்பத்தூர் ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தியை வழிபடுவதால் காரியத் தடங்கல்கள் நீங்கி சிறப்பான பலன்களைப் பெறலாம். குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்கு படிப்பு, திருமணம் போன்ற நற்காரியங்களை நிறைவேற்ற முடியாமல் திணறும்போது அவர்களுடைய நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுபவரே இந்த விநாயக மூர்த்தி ஆவார். வளர்பிறை சதுர்த்தி திதிகளில் 108 பூரண கொழுக்கட்டைகளை ஸ்ரீதாமிரகோட்ட கணபதிக்குப் படைத்து இறை அடியார்களுக்கு தானமாக அளித்து வருதலால் நினைத்த காரியம் கை கூடுவதுடன், பெண் பிள்ளைகள் நலம் அடையவும் கணபதியின் பேரருள் பூரித்து நிற்கும். 

தாமிர உலோக வியாபாரிகள், தாமிர பாத்திர வியாபாரிகள், வெண்கலம், பித்தளை போன்ற தாமிரம் கலந்த உலோக வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இத்தல பிள்ளையார் மூர்த்தியை வழிபட்டு நற்பலன் பெறலாம். அதிக உடல் உஷ்ணத்தால் மூலம், உடல் எரிச்சல், கண் நோய் போன்ற உபாதைகளால் வருந்துவோருக்கு அருளும் குளிர்ச்சி வேந்தனே ஸ்ரீதாமிரகோடட கணபதி மூர்த்தி. 

..... மிக்க நன்றி: "குழலுறவு தியாகி" வலைத்தளம் 

1 comment: