Wednesday, October 31, 2018

சதுரகிரி அதிசயங்களும் அற்புதங்களும் ... (7)


சுந்தரலிங்கம் ... சுந்தரமூர்த்தியின் திருச்சந்நிதி. 


சதுரகிரியான் அருளாசியை பெறுவதற்கு முன் அனைவரும் தரிசிக்கும் ஒரு முக்கியமான சந்நிதி. லிங்கத் திருமேனியான சுந்தரலிங்கம், இங்கு வந்து குடிகொண்ட வரலாறு.


கயிலாய மலையில் இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்க இருக்கும் திருமணக் காட்சியைக் காண பிரம்மா விஷ்ணு முப்பத்துமுக்கோடி தேவர்கள் உள்பட எண்ணற்ற ரிஷிகளும் முனிவர்களும் வந்து குவிந்தால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இந்த நிலையில் உதவக் கூடியவர் அகத்திய மாமுனியே என்று தெளிந்த ஈசன், அகத்தியரிடம் “தாங்கள் உடனே தென்திசை சென்று அங்கு தங்கி இருப்பீர்கள் என்றால் பூமி சமம் ஆகும். தாங்கள் சற்றும் தாமதியாமல் தென்திசை செல்லுங்கள். தங்களால் மட்டுமே இது சாத்தியம்!’’ என்றார்.


அங்கிருந்து புறப்பட்ட அகத்தியர் பொதிகை மலைக்கு வர பூமி சமமானது. பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் குற்றாலத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போதுதான் சதுரகிரியைப் பற்றி பிரமிப்பூட்டும் தகவல்களைக் கேள்விப்பட்டார். சதுரகிரியின் மருத்துவ மகிமை மற்றும் அங்கு கிடைக்கும் இறை இன்பம் ஆகியவற்றை யெல்லாம் குற்றாலத்தில் வசித்த முனிவர்கள் சிலர், அகத்தியரிடம் விவரித்தனர். அத்துடன் சுந்தரானந்தர், கொங்கணர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரியில் தங்கி, காயகற்ப மூலிகைகள் தயாரித்து வருவதையும் அறிந்தார் அகத்தியர்.


ஒரு தினத்தில் அகத்தியர் சதுரகிரியை வந்தடைந்தார். சித்தர்களின் தலைமை பீடாதிபதி அந்தஸ்தில் இருக்கும் அகத்திய மாமுனிவர், தாங்கள் தங்கியிருக்கும் சதுரகிரிக்கு வருவதை அறிந்து மகிழ்ந்தனர் அங்குள்ள ரிஷிகளும் முனிவர்களும். சுந்தரானந்தர், யூகி முனிவர், கொங்கணர் உட்பட முனிவர்கள் பலரும் உரிய மரியாதை செய்து அகத்தியரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ந்த அகத்தியர், சதுரகிரியின் மகிமைகளைக் கேட்டு, அவற்றை நேரில் அனுபவித்து இன்புறவே, தான் சதுரகிரிக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். 


சதுரகிரியில் சுந்தரானந்தரின் ஆசிரமத்தில் தங்கினார் அகத்தியர். தனது வழிபாட்டுக்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். ஆகம சாஸ்திரங்கள் படி அந்த சிவலிங்கத்தை வேளை தவறாமல் பூஜித்தார். அவர் ஸ்தாபித்த இந்த லிங்கத் திருமேனியை சதுரகிரியில் தவம் இருந்த ரிஷிகளும் வழிபட்டு, போற்றிப் புகழ்ந்தனர். இந்த லிங்கமே பின்னாளில் சுந்தர லிங்கம் (சுந்தரமூர்த்தி என்றும் சொல்கிறார்கள்) என அழைக்கப்பட்டது.


சதுரகிரியில் இன்றைக்கு சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என சந்நிதிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட முதலில் தோன்றியது சுந்தர லிங்கமே. 

அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற பெயர் எப்படி வந்தது? 

அந்த லிங்கம், அகத்தியர் பெயரால் அழைக்கப்படாதது ஏன்?


சதுரகிரியில் தினமும் சிவ பூஜையில் திளைத்திருந்த அகத்தியர், ஈசன் அருள் பாலிக்கும் அநேக தலங்களுக்கும் சென்று அவன் ஆசி பெற விரும்பினார். 

‘‘ஆகம சாஸ்திரங்கள் சொன்னபடி, அனுதினமும் தாங்கள் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபடுவதை, பெரும் பேறாகக் கருதி தரிசித்து வந்தேன். இனி, இந்த லிங்கத் திருமேனியை தொடர்ந்து பூஜிக்கும் பாக்கியத்தைத் தாங்கள் எனக்கு அருள வேண்டும்!’’ என்று சுந்தரானந்தர் வேண்டுகோள் விடுத்தார்.

“எனது ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. இந்த லிங்கத் திருமேனிக்கு இனி நீங்களே தொடர்ந்து வழிபாடுகளை நடத்துங்கள்’’ என்றார் அகத்தியர். இதனால் பெரிதும் மகிழ்ந்த சுந்தரானந்தர், சதுரகிரியில் அகத்தியர் ஸ்தாபித்த லிங்கத்துக்கு, தான் தொடர்ந்து பூஜைகள் செய்ய இருப்பதை நினைத்து, இறைவனுக்கு நன்றி சொன்னார்.


அதன் பின், அகத்தியர் சதுரகிரியில் இருந்து புறப்பட்டு, பக்கத்தில் உள்ள ஒரு மலையில் நீண்ட காலம் தவம் இருந்தார். அகத்தியர் தவம் இருந்ததால், அந்த மலை அவரது பெயராலேயே ‘கும்ப மலை’ (கும்பமுனி என்றும் அகத்தியரை அழைப்பதுண்டு) எனப்பட்டது. 


அகத்தியரது உபதேசத்தின்படி தினமும் பூஜைகளைத் தொடர்ந்தார் சுந்தரானந்தர். 

இந்தக் காலத்தில்தான் அந்த லிங்கத் திருமேனிக்கு ‘சுந்தர லிங்கம்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.


சுந்தர லிங்கம், மிகுந்த சக்தி வாய்ந்த கடவுள். சித்தரான அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாலும், சித்த புருஷர்களாலேயே பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப் பட்டதாலும் இவருக்கு சக்தி அதிகம். இவரிடம் வைக்கும் எந்த ஒரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை. 


அருளை வழங்குவது சதுரகிரியின் பிரதான மூர்த்திகளான சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம்; பொருளை வழங்குவது சுந்தர லிங்கம். 


இவருக்கு நடைபெறும் அபிஷேகங்களும் ஆரத்தியும் அற்புதமானவை.

பக்தர்கள் வேண்டும் வரம் அருளி, அருள் பாலித்து வரும் சுந்தரலிங்கத்தின் திருச்சந்நிதியில் பக்தர்களால் பாடப்படும் பாடல்கள், நமசிவாய கோஷ முழக்கங்கள் ஆகியவை சதுரகிரி முழுதும் பரவி எதிரொலிக்கும். எங்கெங்கிருந்தெல்லாமோ இங்கு வந்து திரளும் பக்தர்கள் தங்களது பக்திப் பெருக்கை இந்தப் பரவெளியில் பகிர்ந்து கொள்வார்கள். இந்தக் காட்சியைக் காண அவன் அருள் வேண்டும். 


நள்ளிரவு பன்னிரண்டு மணி வாக்கில், சுந்தரலிங்கம் சந்நிதிக்கு அருகே செல்லக் கூடாது என்பர். காரணம், அந்த நேரத்தில் பஜனைப் பாடல்களின் முழக்கங்கள் வெகு சன்னமாகக் கேட்குமாம். இந்த பஜனையை நிகழ்த்துபவர்கள் பக்தர்கள் அல்ல; சித்தர்கள். இந்த வேளையில் பூசாரிகள் உட்பட எவருமே சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே செல்ல மாட்டார்கள்.


இந்தப் பாடல்களின் முழக்கத்தைக் கேட்கும் பேறு, அதிர்ஷ்டம் உள்ள ஒரு சில பக்தர்களுக்கு மட்டும்தான் வாய்க்கப் பெறும். அதில் ஒரு அபூர்வ பக்தர் சுந்தரம் என்பவர். சாப்டூரைச் சேர்ந்தவர். இவர் ஒரு நாவிதர் (முடி திருத்துபவர்). அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் சதுரகிரிக்கு வந்து, நேர்ந்து கொண்ட பக்தர்களுக்கு மொட்டை அடித்து விடுவார். ஊரில் இருந்து வரும்போது சில தேங்காய்களையும் கொண்டு வந்து விற்பார்.

அது நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிகிற நேரம்... சதுரகிரியே களைகட்டி ஓய்ந்திருந்தது. சுந்தரத்துக்கும் ஓரளவு வருமானம் சேர்ந்தது. மலை மேல் இருந்தவர்கள் எல்லாம் தங்கள் ஜாகையைக் காலி செய்து புறப்பட்டு விட்டனர். சுந்தரத்துக்கு கொஞ்சம் அசதியாக இருக்கவே, ‘சற்று ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு செல்லலாம்!’ என்று தீர்மானித்து சுந்தர லிங்கம் சந்நிதியின் அருகே அமர்ந்தார். அப்போது ஆலய அதிகாரி ஒருவர், ‘‘என்னப்பா சுந்தரம்... பசியோட இருக்கே போலிருக்கு. இந்தாப்பா. சுந்தர லிங்கம் பிரசாதம். சாப்பிடு’’ என்று ஒரு சில தேங்காய் மூடிகளையும் வெல்லக் கட்டியையும் கொடுத்தார்.


தேங்காய் மூடிகளைத் துருவலாகத் துருவிக் கொண்டு, அதில் வெல்லத்தைக் கலந்த சுந்தரம், ஒரு பிடி எடுத்துச் சாப்பிடலாம் என்று வாய் அருகே கொண்டு போனார். அப்போது, சற்றுத் தொலைவில் சுந்தரலிங்கம் சந்நிதிக்கு எதிரே துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதிசயித்தார். ஏனெனில், அங்கு இவரைத் தவிர வேறு எவருமே இல்லை. இவருக்கு பிரசாதம் தந்த ஆலய அதிகாரியும் புறப்பட்டுச் சென்று விட்டார். வியப்படைந்த சுந்தரம், ‘யார் இவர்?’ என எண்ணியபடி அவரின் அருகே சென்றார்.


காவி நிற உடை, நெற்றி, மார்பு மற்றும் கைகளில் பளீரென்ற திருநீறு, கழுத்தில் ருத்திராட்சம், நீளமாகத் தொங்கும் தாடி, கண்களில் ஓர் அதீத ஒளி, கண்டவர் எவரும் விழுந்து வணங்கும் தெய்வீகத் தோற்றம்... சுந்தரமும், அதையே செய்தார்.


பிறகு, ‘‘சாமீ பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்கு காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’’ என்று வெல்லம் கலந்த தேங்காய்த் துருவலை அவரிடம் பவ்யமாக நீட்டினார். ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு விட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தார் அந்தத் துறவி. 


அதற்கு மேல் அவர் அருகில் நிற்க முடியவில்லை சுந்தரத்தால். கால்கள் பின்னுக்கு இழுத்தன. அவர் கண்களைத் தூக்கம் தழுவியது. தடுமாறி மெள்ள நடந்து வந்து, சுந்தர லிங்கம் சந்நிதியை விட்டுச் சற்றுத் தள்ளி இருக்கும் பலகை ஒன்றில் சாய்ந்து படுத்தார்.


‘எவ்வளவு நேரம் தூங்கினோம்’ என்பது சுந்தரத்துக்குத் தெரியாது. 

எங்கோ பஜனைப் பாடல்கள் பாடும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தார். எங்கும் கும்மிருட்டு! ‘எல்லோரும் போய் விட்ட பிறகு, யார் புதிதாக வந்து பஜனை செய்கிறார்கள்?’ என்று எழுந்து உட்கார்ந்தவர், கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்.


சற்றுத் தள்ளி சுந்தரலிங்கம் சந்நிதியின் முன் கண்களைக் கூச வைக்கும் பிரமாண்ட ஒளி வெள்ளத்தைக் கண்டு (மலைக்கு மேலே மின்சார வசதி கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது) பிரமித்தார். அங்குதான் பஜனை நடக்கிறது என்று யூகித்தபடி எழுந்து நடந்தார். ‘அந்த நேரத்தில், அங்கு செல்லக் கூடாது’ என்பது, அப்பாவி பக்தன் சுந்தரத்துக்கு அப்போது தெரியாது!


தன்னைக் கண் விழிக்கச் செய்த பஜனை முழக்கத்தையும், சுந்தரலிங்கம் சந்நிதியின் முன் பிரமாண்டமான ஒளி வெள்ளத்தையும் கண்டு மிரண்ட சுந்தரம், பதைபதைப்புடன் எழுந்து நடந்தார். அந்த நேரத்தில் சுந்தரம் தன்னிலையில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க கால்கள் தகராறு செய்தன. இதோ, அவரின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டும் தொலைவில் பஜனை முழக்கம் துல்லியமாகக் கேட்கிறது; பார்க்க முடிகிறது.


காவி நிற உடை தரித்த சாதுக்கள், வட்டம் என்று வர்ணிக்க முடியாத ஒரு வடிவத்திலும், சதுரம் என்று குறிப்பிட முடியாத ஒரு அமைப்பிலும், ஆனால், மிக அழகாக நேர்த்தியாக சுந்தர லிங்கம் சந்நிதியின் முன் கூடி இருந்ததைப் பார்த்து சுந்தரம் பிரமித்துப் போய் விட்டார்.


நவராத்திரி திருவிழாவுக்காக சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மலையை விட்டு நண்பகல் வேளையிலேயே இறங்கி விட்டனர் என்பதை சுந்தரம் நன்கு அறிவார். மகாலிங்கம் கோயில் பூசாரிகள் தங்களுக்கான இடங்களில், பத்து நாள் திருவிழா ஓய்ந்த களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதியவர்கள் எவரும் மாலை வேளையில் மலைக்கு வரவில்லை. அதனால்தான், முன்னறிவிப்பே இல்லாமல் மலைக்கு வந்து சேர்ந்த இந்த பஜனைக் கூட்டத்தை சுந்தர லிங்கம் சந்நிதி முன் பார்த்த சுந்தரம், வெலவெலத்துப் போய் விட்டார்.


பஜனை நடக்கும் இடத்தை நோக்கி சுந்தரத்தின் கால்கள் தளர்வாக நடை போட்டன. மத்தளத்தின் சத்தமும் டோலக்கின் இசையும் சன்னமாகக் காற்றில் மிதந்து வந்தது. பஜனை நடக்கும் இடத்தை சுந்தரம் இன்னும் நெருங்கவில்லை. சுமார் ஐம்பதடி தொலைவில் அவர் இருந்திருக்கலாம்.


கழுத்தில் புரளும் ருத்திராட்சமும், மேனியில் துலங்கும் திருநீறும் பளீரிட, நமக்கெல்லாம் நாயகனான அந்த நமசிவாயனின் நாமத்தை ராகத்துடன் இசைத்தபடி பஜனை, களை கட்டி இருந்தது. கணீரென்ற குரலும் கலீரென்ற இசையும் ஒன்றுக்கொன்று சளைத்தது போல் இல்லாமல் போட்டி போட்டுக் கொண்டு கம்பீரம் காட்டின. சதுரகிரி வனத்தில் இருந்த ஒவ்வொரு புல் பூண்டும், நெடிதுயர்ந்த மரங்களும், உயிர்வாழ் ஜந்துக்களும் அந்த நாம கீதத்தில் லயித்திருந்தன போலும். வேறு எத்தகைய ஓர் அசைவும் அப்போது இல்லை, சுந்தரத்தின் தளர்வான நடமாட்டம் தவிர.


பஜனை முழக்கமாக ஓங்கி உயர்ந்து வந்த வெங்கலக் குரலோசையில் தன்னை மறந்து, சுந்தரலிங்கம் சந்நிதியின் மிக அருகே சென்ற சுந்தரத்துக்கு, அங்கே வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரின் முகமும், கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டி ஆலாபனை செய்து பாடல்களை ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தவர்களின் முகமும் தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது. அவர்கள் ஒவ்வொருவரையும் கண் கொட்டாமல் பார்த்தார்; மனதில் என்னவோ தோன்ற ஒரு கட்டத் தில் அந்தக் குழுவினரைப் பார்த்துக் கன்னத்திலும் போட்டுக் கொண்டார்.


ஆனால், அவர்களிடம் இருந்து மட்டும் சுந்தரத்துக்கு எந்த ஒரு ரியாக்ஷனும் வரவில்லை. இவர் மட்டும் எல்லோரைப் பார்த்தும் சிநேகமாக ஒரு புன்னகையைப் பூத்தார். ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டே வந்த சுந்தரம் அந்தக் கூட்டத்தில் நடுநாயகமாகத் தெரிந்த அந்த ஜோதிசொரூபமான நபரைப் பார்த்ததும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போனார்.


சதுரகிரியை விட்டு எல்லோரும் கிளம்பி விட்ட அந்த நண்பகல் வேளையில் ஒரே ஒரு துறவி மட்டும் சுந்தர லிங்கம் சந்நிதிக்கு எதிரே அமர்ந்திருப்பதைப் பார்த்தார் அல்லவா? அந்தத் துறவியிடம் கூட, ‘சாமீ... பிரசாதம் சாப்பிடுங்க. சுந்தர லிங்கத்துக்குக் காணிக்கையா வந்த தேங்காய். வெல்லம் கலந்தது. டேஸ்ட்டா இருக்கும்!’ என்று பவ்யமாக நீட்டினார் அல்லவா? அதற்கு அந்தத் துறவி கூட ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டு, சுந்தரத்தைப் பார்த்துப் புன்னகைத்தாரே... அதே துறவி! அவர்தான் இந்த பிரமாண்ட பஜனை கோஷ்டிக்கு நடுவே சம்மணமிட்டு அமர்ந்து, ஒட்டுமொத்த குழுவையே தன் கண்களால் இயக்கிக் கொண்டிருந்தார்! குழுவை மட்டுமல்ல... கோடானு கோடி உயிர்கள் வாழும் இந்த உலகத்தையே இயக்குபவரும் அவர்தான் என்பதை ஒரு சில விநாடிகளுக்குப் பிறகே சுந்தரம் உணர்ந்தார்.


ஆயிரம் வாட்ஸ் பல்புகள் அனைத்தும் ஒரே கணத்தில் ஆஃப் ஆகிப் போனது போல் இருந்தது. மையிருட்டு. ஒட்டு மொத்த வனமே இருளாகிப் போனது. இரவு வேளையில் பூஜைக்குப் பின் ஏற்றி வைத்த எண்ணெய் விளக்கு, கருவறையில் சுந்தர லிங்கத்துக்கு அருகே செந்நிறத்தில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்தது. வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவற்றுள் சில மட்டும், பெயர் சொல்லும்படி தனித்துத் தெரிந்தன.


‘அட... மத்தியானம் நான் கொடுத்த தேங்காய்த் துருவலைப் புன்னகையோடு வாங்கிச் சாப்பிட்ட சாமீ... இவருதான் இந்த பஜனைக் கோஷ்டிக்கே தலைவரா... எந்த ஊரா இருக்கும்... கோவில்பட்டி? ராஜபாளையம்? ஸ்ரீவில்லிபுத்தூர்?’ என்று சிந்தித்த சுந்தரம், அவரையே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து துறவியை நெருங்கி, ‘‘சாமீமீ.....’’ என்று உருக்கமாகக் குரல் கொடுத்த அந்த விநாடியில், சுந்தரத்துக்கு உலுக்கிப் போட்டது உடம்பு.


சுந்தர லிங்கம் சந்நிதிக்கு முன் எவருமே இல்லை. சற்று முன், தன் கண்களால் மிகப் பெரிய பஜனை கோஷ்டியினர், அமுத கானம் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்ட சுந்தரத்துக்கு இந்த வெறுமையான காட்சி மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அப்படி என்றால், சில விநாடிகளுக்கு முன் தான் கண்டு வியந்த காட்சி..? மதியம் தன்னிடம் வெல்லம் கலந்த தேங்காய்த் துருவல் வாங்கிச் சாப்பிட்ட அந்தத் துறவி யார்?


நடந்து முடிந்த இந்த சம்பவங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கும் சுந்தர லிங்கத்தைப் பார்த்துக் கதறினார் சுந்தரம். தரையில் விழுந்து ஒற்றை ஆளாக ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘மகாலிங்கமே, மலைமேல் அருளாட்சி புரியும் மகேசனே, மனித ரூபத்தில் வந்து நீ நடத்திய நாடகத்தைக் காணும் அற்புதப் பேறை எனக்கு அளித்தாயே. உனக்கு உதவிகள் செய்ய எத்தனையோ அன்பர்கள் காத்திருக்கும்போது எளியவனான என்னைத் தேடி வந்தாயே. அன்புடன் நான் கொடுத்த தேங்காய்த் துருவலை வாங்கிச் சாப்பிட்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தாயே. ஆனால், பஜனை நடக்கும் வேளையில் புகுந்து உன் கானத்தைத் தடுத்து விட்டேனே. என்னை மன்னித்து விடு. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த என்னை, பஜனை முழக்கத்தால் எழச் செய்ததும் நீதான்! இந்த சதுரகிரியில் வாழும் சித்தர்களுடன் நீ நடத்தும் நாம கோஷங்களை நான் காணச் செய்யும் பாக்கியத்தை அளித்ததும் நீதான்!’’ என்று அரற்றினார். 


நண்பகலில் தேங்காய்த் துருவல் சாப்பிட்டதும், நடுநிசியில் பஜனை முழக்கம் செய்ததும், சாட்சாத் அந்த மகாலிங்கம் தவிர வேறு யாராக இருக்க முடியும்?


சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சந்நிதிகளில் பணி புரியும் பூசாரிகள் கூட நள்ளிரவு நேரத்தில், சுந்தரலிங்கத்தின் சந்நிதி அருகே வர மாட்டார்கள். சித்தர்கள் அந்த நேரத்தில் வழிபடவும் வரலாம்; வாய்ப் பாட்டு பாடவும் வரலாம். 


பல வருடங்களுக்கு முன் இங்கு பணி புரிந்து வந்த ஒரு பூசாரிக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு பெரியவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்: ‘‘சுந்தரலிங்கம் சந்நிதிக்குப் பக்கத்துல படுத்திருந்த அந்தப் பூசாரி நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். சுந்தர லிங்கம் சந்நிதிக்கு அருகே இருக்கும் படிக்கட்டுகளில் சுமார் ஏழடி உயரமுள்ள ஒருவர் இறங்கிச் செல்வதைப் பார்த்தார். அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வக்கோளாறில் பின்னாடியே சென்றார். நான்கு படி கீழிறங்கிய அந்த உருவம், சட்டென்று திரும்பி பூசாரியைப் பார்க்க, திடுக்கிட்டார். அந்த உருவத்தின் கண்கள் பளிங்கு போல் இருந்தது. கண்களில் இருந்து தகதகவென ஒளி வெள்ளம் பாய்ந்து வந்தது. அதைச் சில விநாடிகள் தொடர்ந்து பார்த்ததால், பூசாரியின் கண்கள் ஏகத்துக்கும் கூசின. இரண்டு கண்களையும் கைகளால் பொத்திக் கொண்டு, தனது இருப்பிடத்துக்கு ஓடியே வந்து விட்டார்...’’ 


இதுபோல் நிறைய அனுபவங்களை மலையில் வாழ்ந்தவர்களும், மலைக்கு வந்து செல்பவர்களும் சொல்கிறார்கள்.


சிவமென்னும் அற்புதம். 

அலை பாயும் மனதிற்கு ஒரு சம்மட்டி அடி கொடுத்து, அதன் ஆதிமூலம் உணரவைக்கும் உண்மையின் உறைவிடம் சிவம். 

சிவத்தை உணர்ந்தால் ஞானம். சிவமே எல்லாம். சிவமே எங்கும். சிவமே எங்கெங்கும்.

நாள் தோறும் அழிந்துகொண்டிருக்கும் இந்த பூதஉடலுள்ளே ஒரு தற்காலிக பயணம் செய்துகொண்டிருக்கும் பேராற்றல் நாயகனின் இந்த உயிர் என்ற தூசியும் ஒரு சிவமே. 

ஒன்றை மற்றொண்டாய் மாற்றுவதும் சிவமே.


.....

வலைத்தளம்/வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.

வலைத்தளம்/வலைப்பூ பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல்கள். என்னுடைய ஆக்கங்கள் இல்லை.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள் (GOOGLE IMAGES)

.....









No comments:

Post a Comment