Sunday, December 15, 2013

அகத்தியர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பஞ்சரத்ன ஸ்தோத்ரம்



அறியாமை வடிவாகிய பூதத்தின் மீது நிருத்தரூபமாக ஒரு பாதக் கமலத்தை வைத்திருப்பவராகவும்,
அடியார்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவதில் நிபுணராகவும்,
தாமரை யொத்த கண்களை யுடையவராகவும்,
போக மோக்ஷங்கள் அளிப்பவராகவும்,
பூலோகத்தில் பிரம்மன், விஷ்ணு முதலியோர்களால் பூஜிக்கப்பட்டவராகவும்,
அடியேனுக்கு எல்லா சித்திகளையும் அருளிச் செய்பவராகவும் இருக்கும்
தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

குபேரன், தீவிர தபஸ்விகள், மோக்ஷத்தை விரும்புபவர்கள், மேலும் மன
உறுதிபெற்ற முனிவர்கள் இவர்களால் பூஜிக்கப்படுபவரும், தன்னையடைந்த
யோகிகளுக்கு முக்தியை அளிப்பவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

வீரபத்ரர் முதலிய சுணங்களால் தக்ஷனுடை யாகத்தை அழித்தவரும், இயக்கர்,
அரக்கர், மானுடர், கின்னரர், தேவர்கள், நாகர்கள், சமுத்திரர்கள், விநாயகர்
முதலியோர்களால் வணங்கப்படுபவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

சந்திரப்பிறை சூடியவரும், மலைமகளின் மார்பகத்தில் பூசப்பட்ட சந்தனம்,
குங்குமம் இவற்றால் அடையாளமிடப்பட்ட நிர்மலமான சரீரத்தையுடையவரும்,
சக்தியோடுகூடி ஸ்ருஷ்டியைச் செய்யும் காலத்து சகலராகவும் இருக்கிற
தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

செந்தாமரையொத்த பாதத்தில்
நன்மணிகளாலான சதங்கை யணிபவரும், முப்புரங்களையழித்தவரும், இமயமலையில்
கைலாசத்தில் சுகமாக வீற்றிருப்பவரும், ப்ருது என்ற அரசனுக்கு
அருள்செய்தவருமாகிய தென்முகக் கடவுளை வணங்குகிறேன்.

ஹே மஹேஸ்வரா!

சங்கரா! விஸ்வநாயகா! நிலைபேறானவரே! இந்த பஞ்சரத்ன ஸ்தோத்திரத்தை தினமும்
காலையில் எவர் துதிக்கின்றாரோ அவருக்கு எல்லா பாபங்களும் அழிந்து,
புத்திரன், மனைவி, நண்பர், செல்வம் யாவும் உம்முடைய கருணையால்
உண்டாகட்டும்.

No comments:

Post a Comment