Monday, December 30, 2013

சிவனின் ஐந்து முகங்கள்

ஓம் சத்யோஜாதய நமஹ
ஓம் வாமதேவாய நமஹ
ஓம் தத்புருஷாய நமஹ
ஓம் அகோராய நமஹ 
ஓம் ஈசானாய நமஹ

சத்யோஜாதம்:
பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார்.  இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.
சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய முகங்கள்:
லிங்கோத்பவர்
சுகாசனர்
உமாமகேசர்
அரிஹரர்
அர்த்தநாரி

வாமதேவம்:
மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.
வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:
கங்காதரர்
சக்ரவரதர்
கஜாந்திகர்
சண்டேசானுக்கிரகர்
ஏகபாதர்

தத்புருஷம்:
அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும்.  பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார்.  காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.
தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
பிட்சாடனர்
காமாரி
காலாரி
சலந்தராரி
திரிபுராரி
 
அகோரம்:
பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.
அகோர முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
கஜசம்ஹாரர்
வீரபத்திரர்
தக்ஷிணாமூர்த்தி
கிராதமூர்த்தி
நீலகண்டர்

ஈசானன்:
கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும்.  அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள்.  மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.
ஈசான முகத்திலிருந்து தோன்றிய வடிவங்கள்:
சோமாஸ்கந்தர்
நடராசர்
ரிஷபாரூடர் 
கல்யாணசுந்தரர்
சந்திரசேகரர்
 
இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

.....  'ஆன்மீகச்சுடரின் ஒளிக்கீற்றுக்கள்'

1 comment: