Thursday, April 25, 2013

ஸ்ரீ காகபுஜண்டர் ...



காகபுஜண்டரின் பதினாறு திருப்பெயர்கள்:

உலகத்தின் ஆதிகுருவாகிய எனக்கு பதினாறு திருப்பெயர்கள் உண்டு. அவையாவன.

1. காகபுஜண்டன்
2. நாகபுஜண்டன்.
3. யோகபுஜண்டன்.
4. புஜங்கன்.
5. புஜண்டி
6. காக்கையன்.
7. நாகேந்திரமுனி.
8. மனுவாக்கியன்.
9. காலாமிர்தன்.
10. சஞ்சீவிமுனி.
11. அஞ்சனாமூர்த்தி.
12. கற்பகவிருட்சன்.
13. நற்பவி.
14. பிரம்மகுரு.
15. ஆதிசித்தர்.
16. திரிகாலஜெயர்..

காக்கையை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு காகபுஜண்டர் எனப் பெயருண்டு. நாகத்தை கரத்தில் தாங்கியுள்ளதால் எனக்கு நாகபுஜண்டன் என்கிற பெயருண்டு. யோகதண்டத்தை கரத்தில் (புஜத்தில்) தாங்கியுள்ளதால் எனக்கு யோகபுஜண்டன் என்கிற பெயருண்டு. கரங்களில் பல அங்கங்களையும் கொண்டுள்ளதால் எனக்கு புஜங்கன் என் கிற பெயருண்டு. கரத்தை அண்டியவர்களுக்கெல்லாம் உபதேசித்தருள்வதால் எனக்கு புஜண்டி என் கிற பெயருண்டு. பலகோடி ரூபங்களை நான் எடுத்தாலும் எனக்கு பிடித்தமான ரூபமாக காக்கை ரூபத்தை கருதுவதால் எனக்கு காக்கையன் என் கிற பெயருண்டு. நாகேந்திரனை தலைவராகக் கொண்ட நாகலோகத்தில் வாழும் நாகங்களுக்கெல்லாம் குருமுனிவராகத் திகழ்வதால் எனக்கு நாகேந்திரமுனி என் கிற பெயருண்டு. உலகத்தின் உயர்ந்த நீதியாக விளங்கக்கூடிய மனுநீதியை உபதேசிப்பதால் எனக்கு மனுவாக்கியன் என்கிற பெயருண்டு. முக்கால ரகசியங்களையும் உணர்ந்து அதன் அமிர்தங்களை இவ்வுலகிற்கு உபதேசித்தால் எனக்கு காலாமிர்தன் என்கிற பெயருண்டு. என்றும் அழியாத சிரஞ்சீவியாக நான் வாழ்ந்து வருவதால் எனக்கு சிரஞ்சீவிமுனி என்கிற பெயருண்டு. முக்காலத்தையும் பூரணமாக உணர்ந்து முக்கால அஞ்சனமாக விளங்குவதாலும், எம்முடைய கரத்தில் அஞ்சனம் கொண்டிருப்பதாலும் எனக்கு அஞ்சனாமூர்த்தி என் கிற பெயருண்டு. கற்பகவிருட்சத்தின் மீது அமர்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் அளவற்ற ஞானத்தை நான் உபதேசித்துக் கொண்டிருப்பதாலும், என் ஞான உபதேசத்தைப் பெறுபவர்கள் கற்பகவிருட்சமாக எல்லா வளங்களையும் கொண்டு விளங்குவதாலும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கும் எனக்கு கற்பகவிருட்சன் என்கிற பெயருண்டு. உலகமெல்லாம் நன்மையே விளைய வேண்டும் என்கிற உயர் நோக்கம் கொண்டு இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டிருப்பதால் எனக்கு நற்பவி என்கிற பெயருண்டு. பரபிரம்ம தத்துவமாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அருளுபதேசம் செய்வதால் எனக்கு பிரம்மகுரு என்னும் பெயருண்டு. சித்தர்களுக்கெல்லாம் முதல் சித்தனாக இவ்வுலகில் தோன்றி எல்லா சித்தர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டு அவர்களை அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு ஆதிசித்தர் என்கிற பெயருண்டு. முக்காலங்களையும் வென்று பலகோடி ஆண்டுகளாய் வெற்றியோடு சிரஞ்சீவியாக இவ்வுலகில் அருளாட்சி செய்து கொண்டு வருவதால் எனக்கு திரிகாலஜெயர் என்கிற பெயருண்டு. இவையன்றியும் இவ்வுலகோர் பல்வேறு குருசொரூபங்களில் எம்மை வணங்கி என்னருள் பெற்று வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

காகபுஜண்டரின் பதினாறு திருக்கரங்களின் அருளாட்சி:

நான் என்னுடைய பதினாறு திருக்கரங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி இவ்வுலகை அருளாட்சி செய்து கொண்டு வருகிறேன். சூலாயுத கரத்தால் உலக உயிர்களை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுகிறேன். எழுத்தாணி கரத்தால் உலகதோருக்கு அவர்களின் நாவில் ஞானத்தை எழுதுகிறேன். ஞானஒளி கரத்தால் உலகோர்களுக்கு ஞானஒளியைப் பாய்ச்சி ஆசீர்வதிக்கிறேன். அபய கரத்தால் உலகோர்களுக்கு அபயமளிக்கிறேன். காமதேனு கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு எல்லா செல்வங்களையும் குறைவின்றி காமதேனு மூலம் பெற்றுத் தருகிறேன். வீணை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அறுபத்திநான்கு தெய்வீகக் கலைகளையும் உபதேசித்தருள்கிறேன். காகத்தைக் கொண்ட கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அன்பு தத்துவத்தையும் ஒற்றுமை தத்துவத்தையும் உபதேசித்தருள்கிறேன். அஞ்சனம் கரத்தைப் பயன்படுத்தி உலகோர்களுக்கு முக்கால ரகசியங்களை உணரும் தெய்வீகத்தை உபதேசித்தருள்கிறேன். வேலாயுத கரத்தால் உலகோர்களுக்கு வெற்றி ஆசீர்வாதங்களை வழங்குகின்றேன். தண்டாயுத கரத்தால் குருவருளுக்குக் கலங்கம் ஏற்படுத்துபவர்களுக்கு தண்டனைகள் வழங்குகின்றேன். வரத கரத்தால் உலகோர்களுக்கு வரம் அளிக்கின்றேன். செந்நாகம் கொண்ட கரத்தால் உலகோர்களுக்கு ஊழ்வினை நீக்கி ஞானத்தை அருள்கிறேன். சுருதி (ஓலைச்சுவடி) கரத்தால் உலகோர்களுக்கு அனைத்து கல்வியையும் அருளுகின்றேன். அமிர்தகலச கரத்தால் உலகோர்களுக்கு அமிர்தத்தை கொடுத்து அவ்வுயிர்களின் ஆயுளை உயர்த்துகிறேன். அட்ட சித்தி முத்திரை கரத்தின் மூலம் உலகோர்களுக்கு அட்டமாசித்திகளையும் வழங்குகின்றேன். யோகத்தண்டு கரத்தின் மூலம் உலகோர்களுக்கு பூரண யோகமார்க்கத்தை உபதேசித்தருள்கிறேன்.

இவ்வாறாகவே, என் வலபாகத்திலே சக்திரூபமாக என் மனைவி பகுளாதேவி சுமந்து கொண்டு இவ்வுலகில் தெய்வீக அருளாட்சிகள் செய்து கொண்டு வருகிறேன். எம்போன்ற எங்களிருவருக்கும் அமைந்த ஒத்த திருக்கரங்களான பதினான்கு திருக்கரங்களைத் தவிர்த்து என் மனைவிக்கு வேறுபட்டிருக்கும் அன்னம் கொண்ட திருக்கரத்தின் மூலம் தாய்மை அன்பையும், கரும்பாம்பு கொண்ட திருக்கரத்தின் மூலம் மோட்சத்தையும் உலகோர்களுக்கு என் மனைவி வழங்கியருள்கிறாள். நானும், என் மனைவியும் சிவசக்தி ரூபத்தில் அதாவது தந்தை தாய் ரூபத்தில் (இடப்பாகம் தந்தையாகவும் வலபாகம் தாயாகவும்) இவ்வுலகில் குருவருளாட்சி செய்து கொண்டு வருகிறோம். தந்தை தாய் ரூபமான எம் குருவருளன்றி பேரருளை முழுமையாக பெறுகின்ற பாக்கியம் உலகோர்களுக்கு கிட்டாது. என்பது பேருண்மை. என், அன்பு சீடனாகிய கோரக்கனே! யான் இதுவரை சொல்லியருளிய எம் தெய்வீக வரலாற்றை நீர் மிகப்பணிவுடன் கேட்டபடியினால் பகுளாதேவி உடனுறை காகபுஜண்டனாகிய எம் வற்றாத பதினாறு குருவருட்பேறுகளும் உமக்குக் குறைவின்றி கிடைக்க ஆசீர்வதிக்கின்றோம். நற்பவி!


காகபுஜண்டரின் மூலமந்திரங்கள்:

காகபுஜண்டரின் மூலமந்திரங்கள் இரண்டு வகைகளாகக் கொண்டதாகும். அவையாவன : கர்மசித்தி மூலமந்திரம் மற்றும் ஞானசித்தி மூலமந்திரம் என்பனவாகும். உலக இன்பங்களைப் பெறுவதற்கு கர்ம சித்தி மூலமந்திரமும், ஞான இன்பங்களைப் பெறுவதற்கு ஞான சித்தி மூலமந்திரமும் பயன்படும்.

காகபுஜண்டரின் கர்மசித்தி மூலமந்திரம்:

"ஓம் க்லீம் ஸ்ரீம் ஸ்ரீபகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டமகரிஷி ப்யோம்
நமஹ நமஹ வசியவசிய ஸ்ரீபாதுகாம் பூஜையாமே! தர்ப்பயாமே!"

காகபுஜண்டரின் ஞானசித்தி மூலமந்திரம்:

"ஞானானந்தமயம்
தேவம் நிர்மல படிகாத்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
காகபுஜண்டம் உபாஸ்மகே!"


( இவை அனைத்தும் வலைத்தளம் / வலைப்பூ பதிவுகள் படித்து திரட்டிய தகவல். வலைப்பதிவர் தகவல்களுக்கு மிக்க நன்றி. படித்ததில் பிடித்ததை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். )

No comments:

Post a Comment