ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (4)
1-9-2024 .. ஞாயிறு
கோனேரிராஜபுரத்திலிருந்து 20 கிமீ. தொலைவில் உள்ள
தேப்பெருமாநல்லூர் திருக்கோயில் .. 30 நிமிஷ டிரைவ்
இந்த கோவிலுக்குள்ள தனித்துவம் என்னவென்றால் இந்த
கோவிலுக்குள் யார்வேண்டுமானாலும், நினைத்த உடன்
எளிதில் செல்ல முடியாது. அப்படியே சென்றாலும்
இறைவனை மனமுருகி வணங்காமல் அவருடைய
அருளை பெற முடியாது. ஏன் என்றால் மறுபிறவி இல்லாத
ஒரு உன்னதமான வரத்தை தரக்கூடியவராய் இருக்கிறார்
இங்குள்ள இறைவன். யாருக்கு மறுபிறவி இல்லையோ,
அவர்கள்தான் இந்தக் கோவிலுக்கு வர முடியும்;
சுவாமியைத் தரிசிக்க முடியும். மகாசித்தர் அகத்திய
முனிவரே இந்த கோவிலுக்கு பலமுறை வர முயற்சி
செய்தும் சிவனை தரிசிக்கமுடியவில்லை என்கிறது
தல வரலாறு.
அருள்மிகு அன்னை வேதாந்த நாயகி உடனுறை அருள்மிகு
அய்யன் விசுவநாதர் தரிசனம் .. ருத்ராட்சம்
அலங்காரத்துடன் உள்ள ருத்ராக்ஷேஸ்வரர் தரிசனம் ..
இத்தலத்து இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு,
இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக்கொண்டு
ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது.
ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத
சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில்
அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த
மேனி உள்ள இறைவனை வேறு எங்கும் தரிசிக்க முடியாது.
இத்தல இறைவனை தரிசித்ததும், பக்தர்களுக்குப்
பிரசாதமாக வில்வதளத்துடன்ருத்ராட்சம் ஒன்றும்
கொடுக்கிறார்கள்.
5000 வருஷ மிகவும் பழமையான இந்த ஆலயம், ஆகம
விதிக்கு முற்றிலும் மாற்றாகஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு
எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் வேறு
எங்கும் காணமுடியாத மாறுபட்ட கோலத்திலேயே காட்சி
தருகின்றனர்.
இந்த கோவிலின் தெற்கு திசை நோக்கி தனி சன்னதியில்
அன்னை வேதாந்தநாயகி வலது காலை முன்னோக்கி
வைத்து உதட்டினை குவித்து நம்மிடம் பேசுவது போன்ற
தோற்றத்தில் காட்சி அளிக்கிறாள். வேதாந்த நாயகி
அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை
செய்துவழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும் என்பது
ஐதீகமாக உள்ளது.
அம்பிகை சன்னதியின் எதிரில் மகாபைரவர் என்ற பெயரில்
ஐந்தடி உயர திருமேனியுடனும், சாந்தபைரவர் என்ற
பெயரில் சிறிய உருவத்துடனும் இரண்டு பைரவர்கள்
எழுந்தருளி இருக்கிறார்கள். இரண்டு பைரவர்கள் ஒன்றாக
சேர்ந்து ஒரே ஆலயத்தில் இருப்பது இந்த கோவிலுக்கே
உரிய சிறப்பம்சமாகும்
இக்கோவிலின் கன்னி மூலையில் தனிசன்னிதியில் கபால
கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில்
மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த
கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது
போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு
இருப்பதுபோல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும் இவரது
கை கால் விரல்கள் மனித விரல்களைப் போல்
நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல் இவர் உடலில்
நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை
அணிந்திருக்கிறார்.
ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில்
அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே
தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன்
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார்
அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது.
இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி
இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும்
பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும்
இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள்,
மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள்,
நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும்.
அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டைஓடு
மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக
அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த
பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும்
அளிப்பேன் என்றுதிருவாய் மலர்ந்தருளினார்.
இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும்
போது, அவரது இடுப்பில் உள்ள கபாலஒட்டியாணத்தை
தரிசிக்கலாம். இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி,
எடுத்த காரியம் முழுவெற்றி பெறும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள நந்தியம் பெருமானுக்கு ஒரு பக்க காது
சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில்
உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில்
மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா
இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாதசுவாமி
எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார்.ஈசன் அப்போது
ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார். இந்த நிலையில்
பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி
இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால்
சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது
மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய
நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப்போக்கை
அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர்
தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம்
சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி
செய்வேன்' என்று ஆறுதல்கூறினார். அதன்படி, இந்த
நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக்
கூறினால் அதுநிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.
பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை
வாகனத்துடன், இடுப்புக்குக் கீழேஇடக்கையை வைத்தபடி
ஒய்யாரமாக, மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன் என்ற அகந்தையுடன்
இறைவனைப் பார்த்த வண்ணம் நிற்கும் கோலத்தில்
காட்சிதருகிறார். இவர் சிவபெருமானை பிடிப்பதற்கு
முன்னர், அம்பாளை வேண்டி அவரின் அருளைப்
பெற்றிருந்த ஆனந்த காட்சி இது.
இப்படி இவர் நிற்பதற்கு பின்னணியில் ஒரு சுவையான
நிகழ்ச்சி உள்ளது. ஒரு சமயம் சனி பகவான்
சிவபெருமானைப் பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி
விட்டதால், அம்பாளிடம் சென்று, நாளை காலை ஏழேகால்
நாழிகைப்பொழுது சிவபெருமானைப் பிடிக்கப்போகிறேன்
என்று சொன்னார். அதைக் கேட்டுக் கோபம் கொண்டாள்
அம்பாள். எப்படியும் சிவபெருமானை ஏழேகால் நாழிகை
பிடித்து தன் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்
என்ற நோக்கத்தில், மறுநாள் சிவபெருமானைப் பிடிக்க
சனிபகவான் மெதுவாக வந்தார். அப்போது அன்னை
சிவபெருமானைப் பக்கத்திலிருந்த அரசமரத்தின் பின்னால்
ஒளிந்து கொள்ளச்சொன்னாள். சிவபெருமானும்
அப்படியே செய்தார். அங்கு வந்த சனி பகவான அம்பாள்
அரசமரத்தடியில் நிற்பதைப் பார்த்து சிவபெருமான் எங்கே
இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டார். அதனால் அரச
மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்று விட்டார்
சனிபகவான். ஏழேகால்நாழிகை கழிந்ததும் சனிபகவான்
அங்கிருந்து மெதுவாக நகரத் தொடங்கினார். அப்போது
அம்பாள் சனி பகவானைப் பார்த்து என்ன, ஈஸ்வரனைப்
பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச்
செல்கிறாயா? என்று கேட்டாள். அதற்கு சனிபகவான் நான்
வந்த வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இறைவனே
அரச மரத்தின் பின்பக்கம் ஒளிந்திருக்க வேண்டியிருந்தது
அல்லவா? அதுவே நான் அவரை பிடித்த நேரம் என்று
ஆணவத்துடன் சொன்னான். அதுமட்டுமில்லாது இடுப்பில்
கைவைத்து சற்று ஒய்யாரமாக அம்பிகை முன் நின்றான்.
சனி சொல்வதைக் கேட்டுககொண்டிந்த சிவபெருமான்
அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு
வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி
பகவானை இரண்டாகக் கிழித்தார். இரண்டாகக்
கிழிக்கப்பட்ட சனி பகவான சிவபெருமானை நோக்கி,
ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்தசட்டப்படி நான்
இயங்குகிறேன். நான் இல்லையேல், உலகில்
ஆணவக்காரர்களும், அக்கிரமம் செய்பவர்களும் பெருகி
விடுவார்கள். எனவே ஆணவத்தோடு நான் நடந்து
கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்பு
போல் செயல்பட அருள்புரிய வேண்டும் என வேண்டினார்.
அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான இரண்டு கூரான
உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு
ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால்
சனி தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
மகா மந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த
ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர்
கோபத்தைத் தணித்தாள் அம்பிகை. அம்பாளின் அருள்
பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த
சொரூபியானார் ஈஸ்வரன். இதனால் அம்பாள்
வேதாந்த நாயகி என்று பெயர்பெற்றாள்.
அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். “ஈஸ்வரா!
நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம்
உங்களைப் பிடித்துக் கொண்டது. இனிமேல் நீங்கள்
விஸ்வரூபம் எடுக்க இயலாது. எனவே நீங்கள் பன்னிரண்டு
ஜோதிர் லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் மட்டுமே அந்தப்
பாவம் நீங்கும்” என்று கூறினார்.
உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க
பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.
இதனைக் கண்ட நாரதர், “இவர்களில் ஒருவர் இங்கு
வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும்
தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு
பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான
க்ஷேத்திரம்!” என்று போற்றிப் புகழ்ந்தார்.
பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களும் ஒருசேர தரிசனம்
கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு
ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி
இல்லாதவர்களும்தான் இங்குவந்து தரிசிக்க முடியும்”
என்று நாரதர் சொன்னார்.
அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர்,
விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார். அந்தச்சந்நிதி
மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.
தெற்குப்பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில்அமர்ந்து நிருதி
திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான
தட்சிணாமூர்த்தி என்பர். இவரை தரிசித்தால் சாபங்கள்
நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
இவருக்கு தினமும் பழையது (தண்ணீர் ஊற்றி வைத்த
முதல் நாள் சாதம்) படைக்கப்படுகிறது. இவரை மனதார
வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும்.
ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியில் இரண்டு
சண்டிகேஸ்வரர்கள் அருள் புரிகிறார்கள். ஒருவர் பெரிய
தோற்றத்தில் தெற்கு நோக்கியும் இன்னொருவர் சிறிய
திருவுருவில் கிழக்கு நோக்கியும் உள்ளனர்.
சண்டிகேஸ்வரர் சந்நிதிக்கு அருகில் கோஷ்டத்தில்
நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு துர்க்கை
எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதியின் பின்புறம்
வடக்கு கோஷ்டத்தில் எட்டு கரங்கள் கொண்ட துர்க்கை
காட்சி தருகிறாள். இந்த இரு துர்க்கைகளும் திரிபங்க
நிலையில் நின்று வடமேற்குதிசையை நோக்கிக்
காட்சி தருகிறார்கள்.
இத்திருக்கோவிலில் ராகு பகவானும், கேது பகவானும்
ஒரே இடத்தில் ஒற்றுமையோடு அருள்புரிகின்றனர்.
வேறு எங்கும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து
காட்சி தருவது இல்லை.
நவ கிரகங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு திசை நோக்கி
இருப்பதும் இங்கு மட்டும்தான் என்பது சிறப்பு அம்சம்.
இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்தியர்
ஸ்ரீ விசுவநாத சுவாமியைத் தரிசிக்க வருவதை அறிந்த
சிவபெருமான், அகத்தியருக்கு மறுபிறவி உண்டு என்பதால்
அவரை அங்குவராமல் தடுக்கஎண்ணி, மகரந்த மகரிஷியை
அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறுகூறினார்
இறைவனின் கட்டளையைஏற்ற மகரந்தமகரிஷி அகத்தியர்
மேற்கொண்டு நடக்கமுடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி
வழியை அடைத்து விட்டார். வழி மறித்த மகரந்த மலர்களை
ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில்
மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, “மகரிஷியே! நான்
சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்”
என்றார். மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே
கோபமடைந்த அகத்தியர், “பூ போன்று இருக்கும் உன்
முகம் யாழி முகமாக மாறட்டும்” என்று சாபமிட்டார்.
அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த
மகரிஷி, “மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி
செய்யவில்லை. இறைவன் கட்டளைப்படிதான் தங்களை
வழி மறித்தேன். உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள்
இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது” என்று கூறி தன்
சாபத்துக்கு விமோசனம் கேட்டார். சாந்தமடைந்த
அகத்தியர், “மகரந்த ரிஷியே, நான் கொடுத்த
சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே
பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப்
பூஜை செய்தால், சாபம் நீங்கிமீண்டும் பழைய
முகத்தினை அடைவீர்” என்று சொல்லிவிட்டுத்
திரும்பிச் சென்றார்.
உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் வந்து யாழி
(சிங்க) முகத்துடன் பூஜை செய்தார். இன்றுஒருவகை
மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக்
கொண்டு பூஜை செய்தார். இப்படியாக ஐம்பது வருடங்கள்
பூஜை செய்தார். ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம்
செய்யும்போதுஅவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை
அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது.
அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக்
கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து
பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து
பூஜை செய்ய, சுவாமிரிஷிக்குக் காட்சி கொடுத்தார். ரிஷி
தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.
அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம்
சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
2010ம் ஆண்டு சூரிய கிரகணத்தின் போது, ஆலயத்தில்
வில்வ மரத்திலிருந்து இலைகளைக்கொய்து வந்த ஒரு
நாகம், அபிஷேக வடிகால் வழியாக ஆலயத்திற்குள்
புகுந்து தனது தோலினை சிவபெருமானுக்கு மாலையாக
அணிவித்து, வில்வ இலைகளை அர்ச்சனை செய்தது.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து
அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு
அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு
ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு
மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
No comments:
Post a Comment