Saturday, January 17, 2026

தீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

அகால மரணம் நிகழாமல் தடுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் தரும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

அருள்மிகு அன்னை பிரகன்நாயகி ( பெரியநாயகி) 

உடனுறை அருள்மிகு அய்யன்  பிறவி மருந்தீஸ்வரர் 


காட்டுக்கு வேட்டைக்கு வந்த திலிபச் சக்கரவர்த்தி, பெண் மானுடன் சுற்றிக் கொண்டிருந்த ஒரு ஆண் மான் மீது அம்பெய்தார்ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார்இதைக்கண்ட பெண் மானாகிய ரிஷியின் மனைவி , அவர் மீது விழுந்து அழுதாள்


நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜாஅவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.


அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.


மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை... அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா


ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். 


வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது  பாதங்களில் விழுந்தாள்.  

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.


""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள்


வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார்


"பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள்அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார்.”

அந்தக் கோயிலில்  ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள்அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார்


அதேபோல் ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர்

அப்போது  அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள்

அம்பாளும் அப்படியே செய்வதாக  வாக்களித்தாள்


ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர்தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர்மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.


ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்ற ராட்சஷன் கணவனாக அமைந்தான்.  


ஒருமுறை, ஒரு அந்தணச் சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான்விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான்


ஜல்லிகை திருத்துறைப் பூண்டி சிவனை வணங்கி, “இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர்களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு,” என வேண்டினாள்


அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான். அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள்


அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? “ என்றான்.


அவனிடம் அம்பிகை, “மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன்,” என்றாள்.


வலைப்பூ பதிவுகள் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்


No comments:

Post a Comment