கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி.
கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு.
சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.
தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர்.
எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர்.
இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது.
நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர்.
பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார்.
தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார்.
பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார்.
பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள். லவனை மட்டுமே ஸீதாதேவி பெற்றதாக கூறப்படுகிறது. தண்ணீர் பிடிக்க ஸீதாதேவி சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை ஸீதாதேவி தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, ஸீதாதேவி சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார்.
குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து ஸீதாதேவி இரு பிள்ளைகளையும் தன் பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து ஸீதாதேவியிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார். உடனே தீக்குளித்த ஸீதாதேவி அதையே தன் மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் ‘கருப்பா’ என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.
பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது.
மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர்.
எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர்.
கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.
ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:
ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹாசாஸ்த பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி ப்ரசோதயாத்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ:
வ்ருத்தாயத் த்விநேத்ரம் ச வ்ளாபத்த சூகுந்தளம்;
நீலம் பீமம் த்ரிபுண்டர வில சந்முகம் குந்தம் தரந்தரம் வாமேச;
க்ருகரம் தக்ஷிணே கரே ஒட்யாண பத்த கச்சம் ச;
ஸர்வா லங்கார பூஷிதம் கருப்பண்ணசாமி நமோஸ்துதே.
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய வசிய வசிய ஹீம் பட் ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள் குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன் தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமியின் பரிபூரண அருள் கிட்டும்.
திருச்சி திருமாந்துறையில் அமைந்துள்ள எங்களுடைய குலதெய்வம் ஸ்ரீ வாலாம்பிகா ஸமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் வாசலில் சற்றே தள்ளி எங்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ண ஸ்வாமிக்கு தனியே கோயில். மூலவர் என சிலை ஏதும் இல்லாது, ஆலமரத்தின் கீழே ஒரு மிகப்பெரிய கருப்பு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதற்குதான் பூஜை புனஸ்காரம் செய்யப்படுகிறது. நிறைய சிறப்புகள் வாய்ந்த மிகுந்த சக்தியுடையவர் இந்த ஆலமரக்கருப்பர். ஆலமரக்கருப்பரை சுற்றி நிறைய வேல்கள் குத்தப்பட்டுள்ளன. சிறிய யானை உருவங்களும் நிறைய இருக்கின்றன. அனைத்து வேல்களுக்கு எலுமிச்சம்பழம் குத்தியிருக்கும். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
ஆலமரத்தடி கருப்பர் காலடி மண் எப்போதும் என் வீட்டு பூஜை அறையில் இருக்கும். இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் பயமே இருக்காது. எங்கு சென்றாலும், பயணங்களில் இந்த மண்ணில் சிறிதளவு லக்கேஜில் இருக்கும். இந்த மண்ணுடன் பயணம் செல்வதால் நம்மைப் பாதுகாக்க அந்தக் காவல்தெய்வமான கருப்பண்ணஸ்வாமியும் நம்முடன் வருவதாக ஒரு நம்பிக்கை. இந்த மண்ணுக்கு அவ்வளவு மகிமை.
ஒரு முகநூல் பதிவில் படித்து அறிந்த விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும், இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன். பதிவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்



No comments:
Post a Comment