Sunday, July 14, 2013

சித்தர்கள் வாழும் சுருளி மலை


மேற்கு தொடர்ச்சி மலை ...
வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும், தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது. இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும். இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.



சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25-வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-

" அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா? "
என்ற தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வதில்லை. கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெடுக்கவும், சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து, அன்ன தானம் செய்தனர். அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம், மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது. படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும். எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம். ஒளி உமிழும் உருண்டைகள் ஆங்காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம். திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும், நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும், அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.



சுருளிமலை - தேவலோக கிரி கைலாசப் புடவு - இமயகிரி சித்தர் வனம்

எம்பெருமான் ஈசனின் இறை அருள் நிறைந்த கைலாயத்தில் [இமயமலை கைலாயம்] "இமயகிரி சித்தர்" என்றொருவர் இருந்தார். அவர் சிவபெருமானைத் தினமும் நேரில் பூசிக்கப் பெற்றவர். அவர் மீது சிவபெருமானுக்கு மிகவும் பிரியமுண்டு. அப்படியிருக்கின்ற காலத்தில் துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் எக்கியங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள்.

அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர், ரிஷிகளுக்கு தேவ லோக வாழ்வைக் கொடுத்து தாமும் "மகா லிங்க" சொரூப மாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.

பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகும், தேவலோக கானல்களையும், வனப்பூஞ் சோலைகளும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.

கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார். ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள் கூறியது " நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந்தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று இங்கு வருகையில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் " என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி, முனிவர், சித்தர்களைப் பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய இடம் பார்த்து ஆற்றோரம் இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும் படியாகவும் உள்ளே விசாலமாகவும் புடவு செய்து [குகை] குகைக்கு முன் பூத நாராயண சித்தரை காவலிருக்க வைத்துச் சொன்னதாவது,

இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள் தவ சிரேஷ்டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும். உள்ளே வரலாம், இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில்,



கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர் சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொடுக்க விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.

சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள், முனிவர், சித்தர்கள் இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து, "அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே உங்கள் தவம் முடிந்தவுடன் கைலாய வாழ்வு கொடுப்போம்" என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.

அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர் மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன் வெளிவருகின்றார்.

வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க விரும்புகின்றேன். ஆகையால் தங்களை யான் கைலாயத்தில் தினமும் பூசித்த வழக்கப்படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளி, சுவாமி லிங்க சொரூபமாயும், தாய் அம்மை சொரூபமாயும் அமர்ந்தனர்.

அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும் பார்த்து இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்தமையால் இந்தப் புடவுக்கு "கைலாசப் புடவு" என்ற பெயருடன் விளங்கட்டும் என்று பெயரிட்டனர். அன்று முதல் இந்தப் புடவு என்ற "கைலாச புடவு" "கைலாசநாதர் குகை" என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது. [ கோரக்கர் மலை வாகடம் ]


இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன் நுழைந்த அதிசயக் குகை இது ஒன்றுதான்.


Courtesy: http://siththarpokkisam.blogspot.in


 

No comments:

Post a Comment