ஷேத்ர யாத்திரை .. கும்பகோணம் 2024 (7)
2-9-2024 . திங்கள்
கும்பகோணத்திலிருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ள
சுவாமிமலை திருக்கோயில்.. 20 நிமிஷ டிரைவ்
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் வீடு இது.
கருவறையில் 5 அடி உயர நின்ற கோலத்தில் வலது கரத்தில்
தண்டம் ஏந்தியபடி இடது கரத்தை இடுப்பில் வைத்து சிரசில்
ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும்,
கருணாமூர்த்தியாக, ஊறு முத்திரையில், யோக நிலையிலுள்ள
குருவாக அருள்பாலிக்கும் அருள்மிகு சுவாமிநாத சுவாமி தரிசனம்
சிவபெருமான் இந்த தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து
குருநாதனாக முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டதால்,
சுவாமிநாதன் என்று போற்றப்படுகிறார்.
சுவாமிநாதனாக இருப்பதால் இந்த தலமும் சுவாமிமலை ..
குருவாகி இருந்து அருளியதால் “தகப்பன்சுவாமி” என புகழ் பெற்று
காணப்படுகிறார் ..
சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60
படிகளில் ஏறிச்செல்ல வேண்டும் .. சன்னதிக்கு எதிராக மயிலுக்குப்
பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற
யானை உள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்.
சுவாமிமலை இயற்கையான மலை அல்ல.
ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு
மாடக்கோவில். இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில்
உள்ளது. இரண்டாம் பிரகாரம்கட்டுமலையின் நடுப்பாகத்திலும்
முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப்
பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
மலைக்கோவிலின் கீழ்த்தளத்தில் அருள்மிகு தாயார் மீனாட்சி
உடனுறை அருள்மிகு அய்யன்சுந்தரேசுவரர் தரிசனம்.
சுவாமிமலைலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள பட்டீஸ்வரம்
தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் .. 15 நிமிஷ டிரைவ்
திருக்கோயிலில் அருள்மிகு அன்னை ஞானாம்பிகை
(சோமகமலாம்பிகை) உடனுறை அருள்மிகு அய்யன்
தேனுபுரீஸ்வரர் தரிசனம் ..
எந்த இடையூறு வந்தாலும் இந்த தலத்தில் உள்ள ஈசனையும்,
அன்னையையும் வணங்கினால் அவை விலகி ஓடி விடும்
பராசக்தியானவள் தனித்து தவம் செய்வதற்காக இத்தலம் அமைந்த
இடத்திற்கு வந்து ஒரு வனம் அமைத்து தவம் செய்தாள். தேவர்கள்
மரம், செடி கொடிகளின் வடிவம் தாங்கி உதவி செய்தனர்.
தவத்திற்கு உதவவேண்டி காமதேனு தன் புத்திரி பட்டியை
அனுப்பியது. தேவியாரின் தவத்திற்கு உதவியான பணிவிடைகள்
செய்தது. தேவியாரின் தவத்திற்கு உவந்து பெருமான் தமது
சடைமுடியுடன் காட்சி கொடுத்தார். அதனால் அப்பெருமானுக்குக்
கபர்தீசுவரர் என்ற பெயர்ஏற்பட்டது.
இவ்வனத்தின் பெருமையையும், தூய்மையையும் பட்டி
உணர்ந்ததால் தானும் பெருமானை பூஜிக்கவிரும்பி மணலினால்
ஓர் லிங்கம் அமைத்து நாள்தோறும் விதிப்படி பூசித்து வந்தது.
தனது தூய்மையான பாலைக் கொண்டும், ஞானவாவியின் நீரைக்
கொண்டும் நீராட்டி வழிபட்டது. பெருமான் அவ்வழிபாட்டிற்கு
மகிழ்ந்து மணலினால் ஆகிய லிங்கத்தில் என்றும் நிலையாய்
அமர்ந்தருளினார்.
அந்த பசு தனது பால் காம்பு வழியே பால் சொரிந்து ஈசுவரனை
வழிபட்டதால் இங்கே இறைவன் 'தேனுபுரீசுவரர்' என்னும் பெயரை
பெற்றார். மேலும் பட்டியின் பெயரால் இத்தலம் 'பட்டீஸ்வரம்'
ஆயிற்று. கோவிலின் ஒரு தூணில் பசு, பாலைப் பொழிந்து ஈசனை
வழிபடுகிற காட்சிசெதுக்கப்பட்டிருக்கிறது. சன்னதியிலும்
இச்சிற்பம் சுதை வடிவில் உள்ளது.
சிவபெருமான் அனுப்பிய முத்து பந்தல் அலங்காரத்துடன் கூடிய
குடையைபிடித்தபடி திருஞானசம்பந்தர் பட்டீஸ்வரம் கோவிலுக்குள்
வந்தார். அவர் வருவதை பார்க்க தேனுபுரீஸ்வரர் விரும்பினார்.
இதனால் தனக்கு எதிரே இருந்த நந்திகளை சற்று விலகி
இருக்குமாறு ஆணையிட்டார். எனவே இந்த தலத்தில் 5 நந்திகளும்
சிவபெருமானுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கின்றன.
இதனால் இந்த தலத்தை பஞ்சநந்தி தலம் என்றும் சொல்கிறார்கள்.
மூன்று மகாக்ஷேத்திரங்களில் மட்டும், ராமரே சிவனை பிரதிஷ்டை
செய்துள்ளார். அவற்றில் ஒன்று இந்தப் பட்டீஸ்வரம் திருக்கோயில்
வாலியை மறைந்திருந்து அழித்து, யுத்த தர்மத்தை மீறியதால்,
சாயஹத்தி தோஷம் பெற்ற ராமபிரான், அதனை நிவர்த்தி செய்யும்
பொருட்டு இத்திருக்கோயிலில் சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார்
தான் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு அபிஷேகம் செய்ய தன்னுடைய
வில்லைக் முனன கொண்டு ‘கோடி தீர்த்தம்’ என்ற கிணற்றை
உருவாக்கி அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு
போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டைசெய்து
வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.
விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி
என்ற பட்டம் இத்தலத்தில் பெற்றசிறப்புடையது.
பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள அருள்மிகு துர்கா
பரமேஸ்வரி தரிசனம்…
மிகவும் சக்தி வாய்ந்த இந்த துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக,
மகிஷாசுரன் தலை மீது நின்ற கோலத்துடன், சிம்ம வாகனத்துடன்
கருணை வடிவமாக எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன்
காதுகளில் குண்டலங்களோடு அருள் பாலிக்கிறாள். கைகளில்
சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு உள்ளன .. ஒரு கையில்
அபய முத்திரை, மற்றொரு கையில் கேடயம் .. ஒன்பது கஜப்
புடவையுடன் திரிபங்கா தோரணையில் காட்சி அளிக்கின்றாள்.
சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம்
இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது.
மாமன்னன் இராஜராஜ சோழன் முதலான சோழ மன்னர்கள்
அனைவராலும் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்யப்பட்ட காவல்
தெய்வம் இவளே. சோழமன்னர்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும்
போதும் வெற்றி வாகை சூட போர்க்களம் புகும்போதும் இந்த
தேவியின் அருள் வாக்கு பெற்றபின்னரே செயல்படுவர்.
வலைத்தளம்/வலைப்பூ/முகநூல் பதிவுகள் படித்து அறிந்த
விஷயங்களை நான் அறிந்தவைகளோடு அங்கொன்றும்,
இங்கொன்றுமாக சேர்த்து இங்கு ஒழுங்குபடுத்தி ஏற்றியுள்ளேன்.
பதிவர்களுக்குமிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படங்கள் உதவி: வலைப்பூ பதிவுகள்
No comments:
Post a Comment