Thursday, September 6, 2012

ஷீரடி ஸாயி திருக்கவசம்


கார்மேனி ஐங்கரனே காப்பு

1. திருவளரும் சீரடிவாழ் ஸ்ரீ ஸாயி
நாதனவன் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீஸாயி அமலனவன்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீஸாயி புனிதனவன்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீஸாயி தேவனவன்
கண்ணிரண்டும் தினமும் காக்க

2. புவியிறைஞ்சும் ஸ்ரீஸாயி புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீஸாயி சேவகன்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவன் ஸ்ரீஸாயி பாபாஎன்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியான் ஸ்ரீஸாயி பாபாஎன்
நாசியினை நயந்து காக்க

3. கண்கண்ட ஸ்ரீஸாயி தெய்வமவன்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீஸாயி விமலனவன்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீஸாயி பரமனவன்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீஸாயி மாதவன்என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க

4. தூயசுடர் வடிவான ஸாயி அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீஸாயி நீதனவன்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸாயிபரன்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸாயிவள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க

5. குருஸாயி பகவனவன் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீஸாயி உத்தமன் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீஸாயி பாபாஎன்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீஸாயி போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க

6. கனிவுமிகு ஸ்ரீஸாயி கடவுளவன்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீஸாயி இறையவன் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீஸாயி பதியவன்என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீஸாயி பாபாஎன்
பாதவிரல் பத்தும் காக்க

7. இருதொடையும் ஸ்ரீஸாயி ஈசனவன்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீஸாயி
வானவன்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீஸாயி என்வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீஸாயி ஆண்டவன் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க

8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீஸாயி கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீஸாயி பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீஸாயி அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீஸாயி உடனே காக்க

9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீஸாயி என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீஸாயி பாபா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீஸாயி
இராமனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் சீரடிசேர்
ஸ்ரீஸாயி சித்தன் காக்க.

No comments:

Post a Comment